Nama Article 12th December 2017
Source: நாம மகிமை : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
தியானம், ஜபம், பூஜை, யக்ஞம், க்ஷேத்திராடனம் ஆகியவற்றைப் போலவே நம் தேசத்தில் நீண்ட காலமாக பகவந்நாமாக்களைக் கோஷ்டியாகப் பாடி பஜனை செய்கிற பழக்கமும் இருந்து வந்திருக்கிறது. இந்த ஜீவாத்மாவானது பரமாத்மாவுடன் தொடர்பு கொள்வதற்கு ஒரு பெரிய உபாயமாக நாம பஜனை தொன்று தொட்டு தேசத்தில் அநுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. அநேகமாகக் கிராமம், நகரம் எல்லாவற்றிலும் பஜனை மடம், அல்லது பஜனைக்கூடம் என்றே ஒன்று காணப்படுவதிலிருந்து, பஜனை பத்ததி நம் நாட்டில் எவ்வளவு செழிப்பாக இருந்திருக்கிறது என்று ஊகிக்கலாம். இந்த பஜனை மடங்களில் சனிக்கிழமை தோறும், ஏகாதசி தோறும் ஜனங்கள் எல்லோரும் சேர்ந்து பஜனை செய்வார்கள்.
கோயில்களில் பூஜையைப் பார்க்கிறோம்; தெய்வத்தைத் தியானிக்கிறோம். பஜனையிலோ நாமே வாய்விட்டுத் தெய்வத்தின் நாமங்களையும், குணங்களையும், லீலைகளையும், பாடி ஈசுவரபரமாக மனஸை ஈடுபடுத்துகிறோம். பலர் சேர்ந்து கொண்டு சமுதாய வாழ்க்கை அடிப்படையில் பக்தி செய்கிற சிறப்பு பஜனைக்கு உண்டு. அவரவரும் ஆத்ம க்ஷேமத்தை அடைந்து, அதனாலேயே ஜீவ கோடிகளுக்கு க்ஷேமத்தைத் தரவேண்டும் என்று, தனி மனிதர் அடிப்படையிலேயே (individual basis) ஹிந்து மதம் முக்கியமாக அமைந்திருந்தாலும், கோயில், உத்ஸவம், பஜனை இவற்றில் கூட்டு வழிபாட்டு முறை (congregational worship)யும் இருக்கிறது.
Chant the Mahamantra Nama kirtan :
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
No comments:
Post a Comment